கொடநாடு எஸ்டேட் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கொடநாடு எஸ்ட்டேட் பொதுப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் பொதுப் பாதையை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முகுந்தம் சர்மா, தவே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் நேரில் ஆஜராகி, கொடநாடு எஸ்டேட்டின் நடைபாதை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுவதால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்காக எஸ்டேட் நிர்வாகம் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினார்.
எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் பதிலளிக்கையில், இரவு நேரத்தில் கொடநாடு பகுதிகளில் சமூக விரோதிகளின் நடவடிக்கைகள் இருப்பதால்தான் இரவு கொடநாடு எஸ்டேட்டின் நடைபாதை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், கொடநாடு எஸ்டேட் நடைபாதையை 24 மணி நேரமும் திறந்து விட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து எந்தத் தொகையையும் வசூலிக்கக்கூடாது. கொடநாடு எஸ்டேட் அருகே போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கின் விசாரணை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications