சீட் கிடைக்காத கடலூர் திமுக எம்.எல்.ஏ போர்க்கொடி-சுயேச்சையாக போட்டி?
கடலூர்: சீட் கிடைக்காத கோபத்தில் இருக்கும் கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இதுவரை இதுகுறித்து அவர் முடிவெடுக்கவில்லையாம்.
அதிமுகவில் மட்டுமல்லாமல் திமுகவிலும் கூட பலர் சீட் கிடைக்காத கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சீட் கொடுத்ததைக் கண்டித்து ஒருவர் தீக்குளிக்க முயன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடலூர் தொகுதி வேட்பாளராக மாநில மாணவர் அணி அமைப்பாளர் இள. புகழேந்தி அறிவிக்கப்பட்டதற்கு, தற்போது கடலூர் உறுப்பினராக உள்ள அய்யப்பன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
பல இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அய்யப்பன் ஆதரவாளர்கள் வெட்டிச் சாய்த்தனர். நகர திமுக அலுவலகத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலவுகிறது.
அய்யப்பனுக்கு ஆதரவாக பலரும் திரண்டு வருகின்றனர். திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அய்யப்பனுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஆனால் வேட்பாளர் மாற்றம் கிடையாது என்று திமுக தலைமை அறிவிவித்து விட்டது. இதையடுத்து திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்று அய்யப்பனை அவரது ஆதரவு திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அய்யப்பன் கூறுகையில், நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னும் அவகாசம் இருப்பதாக கருதுகிறேன். யோசித்து செய்வேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications