திருவொற்றியூர் திமுக கவுன்சிலர் மீது திருடன் ஆசிட் வீச்சு: பார்வை போனது
சென்னை: சென்னை திருவொற்றியூரில் அப்பகுதி திமுக கவுன்சிலர் கார்த்திகேயன் மீது திருடன் ஒருவன் ஆசிட் ஊற்றிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர், தாங்கல் புதிய காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). அவர் திருவொற்றியூர் நகராட்சி 29-வது வார்டு திமுக கவுன்சிலராகவும், வட்ட செயலாளராகவும் உள்ளார்.
அவருக்கு சோபி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் நேற்று காலை 10.30 மணியளவில் தாங்கல், பீர்பைல்வான் தர்கா தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் நின்று கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் பிரபல திருடன் குட்டி (30) என்பவன் அங்கு வந்தான். அவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கார்த்திகேயன் முகத்தில் வீசினான். ஆசிட் பாட்டில் வெடித்து சிதறியதில் கார்த்திகேயனின் முகம், கண் மற்றும் உடல் முழுவதும் வெந்தது.
அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கையில் குட்டி தன் இடுப்பில் வைத்திருந்த அரிவாளால் கார்த்திகேயனை வெட்ட ஓடி வந்தான். இதைப் பார்த்த அப்பகுதி திமுக வட்ட துணை செயலாளர் பிரபா (32) குட்டியை மடக்கிப் பிடிக்க முயன்றார். உடனே குட்டி பிரபாவை வெட்டினான். இதில் அவரது வலது கை பெருவிரல் துண்டாகி கீழே விழுந்தது. குட்டி பிரபாவின் முதுகில் வெட்டினான்.
அப்போது அங்கிருந்த மக்கள் ஓடிவந்தவுடன் குட்டி அரிவாளை கீழே போட்டிவிட்டு தப்பிவிட்டான். கார்த்திகேயன் மீது ஆசிட் வீசியபோது அருகில் நின்று கொண்டிருந்த வட்ட பிரதிநிதி ஞானவேல் என்பவருக்கு கழுத்து மற்றும் தலையில் ஆசிட் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆசிட் பட்ட கார்த்திகேயனுக்கு பார்வை பறிபோனது.
உடனடியாக அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆசிட் பட்டு தலை, கழுத்து கருகிய ஞானவேல் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டுப்பட்ட பிரபா ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, நகரச்செயலாளர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளி குட்டியை வலைவீசி தேடி வருகிறார்.
மேலும் விசாரணையில் பிரபல திருடனான குட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாங்கல் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயற்சி செய்தபோது அவனை கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் சிலர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனால் கார்த்திகேயனை ஒழித்து கட்டிவிடுவேன் என்று குட்டி கூறியதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கார்த்திகேயன் மீது குட்டி ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications