தேமுதிக பேராவூரணி தொகுதி வேட்பாளரான அருண் பாண்டியன்
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக சார்பில் பேராவூரணி தொகுதியில் நடிகர் அருண் பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார்.இது குறித்து அருண் பாண்டியன் கூறுகையில், விஜயகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஊமை விழிகள் படத்தில் இருந்தே எங்களது நட்பு தொடர்கிறது. எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக சேவையில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நந்தலாலா, பேராண்மை, அங்காடித் தெரு போன்ற நான் தயாரித்த படங்கள் சமூக சிந்தனை கொண்டவை. எனக்கு போதும் என்கிற அளவுக்கு பணமும், புகழும் இருக்கிறது.
இனிமேல் மக்கள் பணியாற்றுவது தான் என் வேலை. பேராவூரணி எனக்கு பரிச்சயமான தொகுதி. அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர்.
என்னை வெற்றி பெறச் செய்தால் முன் மாதிரி எம்.எல்.ஏவாக பணியாற்றுவேன். பல தேர்தல் கமிஷனர்கள் வந்து போய் உள்ளனர். டி.என்.சேஷன் பொறுப்பேற்ற போதுதான் அதன் மகத்துவத்தை அறிய முடிந்தது. அதே போல நானும் எம்.எல்.ஏ. பதவியில் முத்திரை பதிப்பேன் என்றார்.