அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பிரசாரத்தில் திமுக நிர்வாகிக்கு அடி உதை
கோவை: திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பிரசாரத்தில் திமுக நிர்வாகிக்கு அடி உதை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கோஷ்டி, மாநகர செயலாளர் வீரகோபால் கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன.
தேர்தல் வேலைகளில் இரு தரப்பினருக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது. இதன் உச்ச கட்டமாக கோவை செல்வபுரம் செட்டி வீதியில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அமைச்சரை வரவேற்க வார்டு செயலாளர் இளங்கோவும், அவரது ஆதரவாளர்களும் சென்றனர்.
ஆனால் அமைச்சர் தொகுதிக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது என்று அந்த பகுதி திமுக நிர்வாகிகள் நாச்சிமுத்துவும், அவரது மகன்களும் தடுத்துள்ளனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி நாச்சிமுத்துவின் மகன்கள் தங்கவேல், பன்னீர் ஆகியோர் இளங்கோவை அடித்து உதைத்தனர்.
இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை வேடிக்கை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.