திமுக - அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக உருவெடுக்கும்! - வைகோ

ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் வைகோ இதில் பங்கேற்றுப் பேசியதாவது:
ம.தி.மு.க., புது எழுச்சியோடு வீறு கொண்டு எழும். ம.தி.மு.க., போர்க்குதிரை போன்றது. இதில் மற்றவர்கள் ஏறி சவாரி செய்ய முடியாது. மார்ச் 8ம் தேதியே அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க.,வை வெளியேற்ற திட்டமிட்டு விட்டதால்தான், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு 41, 15, 10 என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 160 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களையும் அறிவித்தனர்.
கம்யூனிஸ்ட்கள் மத்தியில் நான்கு சுற்று பேசிய பின், நம்மிடம் இரண்டு சுற்று பேச்சு வார்த்தை மட்டும்தான் நடந்தது. கடைசியாக எட்டு தொகுதி கொடுப்பதாக கூறினர்; அப்புறம் ஏழு தொகுதி என்றனர். செங்கோட்டையன் வீட்டில் பேச்சுவார்த்தை என்றனர். அங்கு நமது குழுவினர் சென்றால், வீட்டில் அவர் இல்லை. பன்னீர்செல்வம் வீட்டில் என்று அழைத்துச் சென்றனர். நமது குழுவினர் எதற்காக வந்தனர் என்றே அவருக்கு தெரியவில்லை. கடைசியாக எட்டு தொகுதி என்றனர்.
எட்டுத் தொகுதியை ஏற்று கூட்டணியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டால் என்ன செய்வதென்று எண்ணி, ஏழு தொகுதிதான் என்றனர். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக கூட்டணியில் இருந்து வெளியேற்றினர் என்பதுதான் உண்மை.
கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றதும் சிலர், மூன்றாவது அணி என்றனர்; உருவ பொம்மை எரித்தனர். தனிக்கூட்டம் நடத்தினர். ஆனால், ம.தி.மு.க., அப்படிச் செய்ய முடியாது. நாம் கட்டுப்பாடான இயக்கம். கண்ணியத்தை எப்போதும் போற்றுபவர்கள். அதிமுக கூட்டணியில் வலுவாகத்தானே இருந்தோம்.
கண்களை விற்று சித்திரம் வாங்க முடியுமா? தி.மு.க. - அ.தி.மு.க.,வுக்கு மாற்று சக்தியாக உருவாவோம். நாம் எடுத்த முடிவு, மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைத் தேடிக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க.வையோ, தி.மு.க.,வையோ விமர்சிக்க வேண்டாம். நாம் எடுத்த முடிவு தேர்தல் புறக்கணிப்பு அல்ல; தேர்தலில் போட்டியில்லை என்பதுதான். அடுத்த தேர்தல் களம் நம்முடையதுதான்," என்றார்.












Click it and Unblock the Notifications