மாற்றம் வேண்டும் என்று பேசும் மதுரை கலெக்டரை மாற்றக் கோரி வழக்கு
சென்னை: தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பேசி வருவதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சத்தியவாணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனு:
நான், ஸ்ரீசந்தனா காளியம்மன் மகளிர் மேம்பாட்டுக்குழுவின் தலைவராக இருக்கிறேன். மதுரை மாவட்ட கலெக்டர் பதவியில் இருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி, மதுரையில் பெண்கள் கல்லூரியான பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி போன்ற கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது மாணவர்களிடையே, இந்த தேர்தல் மூலம் மாற்றங்கள் வரவேண்டும்' என்று கூறி வருகிறார். அவர் அப்படி பேசியது பல்வேறு பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக மறைமுகமாக கூறும் செய்தியாக இது உள்ளது.
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்குத்தான் இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இப்படி பேசுவது, தேர்தலை நேர்மையாக நடத்துவதாகாது. தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அவரது பேச்சு உள்ளது.
எந்த கட்சிக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் தேர்தலை நடத்த வேண்டிய இந்த அதிகாரி, எதிர்க்கட்சிக்கு சாதகமாக பேசி வருவது தவறானது. வாக்காளர்களுக்குள் இப்படிப்பட்ட கருத்துகளை புகுத்துவது அவரது கடமை இல்லை.
மாணவர்களிடம் பேசும்போது, மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் வாக்களிக்க வலியுறுத்துங்கள்' என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி 29-ந் தேதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தேன்.
மதுரையில் நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கு மதுரை மாவட்ட கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும். நான் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications