எகிப்தில் வெடித்தது போன்ற புரட்சி தமிழகத்திலும் வர வேண்டும்-விஜயகாந்த்
அரியலூர்: எகிப்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி உருவானது போல் தமிழகத்திலும் கருணாநிதி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி உருவாக வேண்டும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அரியலூர் அண்ணாசிலை அருகே விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
அரியலூர் பகுதியில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் எந்த ஒரு தொழிற்சாலையும் இங்கு தொடங்கப்படவில்லை. கருணாநிதி பேரன்கள் நிறுவனம் சார்பில் 7 முதல் 10 படங்கள் வெளி வந்துள்ளன.
இதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டால் என்னுடைய பாக்கெட் மணியில் இருந்து படம் எடுக்கிறேன் என்று கூறுகிறார்.
இவருடைய பாக்கெட் மணியில் இருந்து இவ்வளவு என்றால் இவருடைய தாத்தா, அப்பாவிடம் எவ்வளவு பணம் இருக்கும்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி வடிப்பது நீலிக்கண்ணீர் ஆகும். எகிப்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி உருவானது போல் தமிழகத்திலும் கருணாநிதி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி உருவாக வேண்டும்.
கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றுவதில் வல்லவர். காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை என்று எல்லாவற்றிலும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்தவர். கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி.
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குதான் கேடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலுவும் ஏமாற்ற தெரிந்தவர்தான். இல்லா விட்டால் மனைவி பெயரில் சீட்டு வாங்கி வேட்பு மனுவில் குளறுபடி செய்து தானே சீட்டு வாங்கி இருப்பாரா? என்றார் விஜயகாந்த்.
முன்னதாக சேலத்தில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்,
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் வாக்காளர்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன். அந்த கூட்டணி, மக்களுக்கு குறிப்பாக பணத்தை கொடுத்து நாட்டையே கெடுக்கும் கூட்டணியாகும். இந்த தேர்தலில் போலீசார் எந்த அணிக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பெரும்பாலான அதிகாரிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் ஒரு சில போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள் பெயர் விவரங்களை பட்டியல் எடுத்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க உள்ளேன்.
நான் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளதை குறைகூறு கிறார்கள். அ.தி.மு.க. என்னுடைய மானசீக குருவான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அந்த கட்சியுடன் தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். சுய நலவாதிகளிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் காணப்பட்டது.
இந்த கூட்டணிக்கு நீங்கள் மீண்டும் வாக்களிக்காதீர்கள். இந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேலத்தையே விற்று விடுவார்கள்.காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டின் மீது அக்கறை கிடையாது. அவர்களுடைய அக்கறை எல்லாம் டெல்லி ஆட்சியைப்பற்றிதான். அவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி மட்டுமல்ல தமிழக மக்களைப்பற்றியும் அக்கறை கிடையாது.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் அவர்கள்.
இதையெல்லாம் சிந்தித்து பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவர்களுடைய ஆட்சியில் தான் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 60 ரூபாய்க்கும் அதி கமாக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைப்பற்றியெல்லாம் காங்கிரசுக்கும், தி.மு.க. வுக்கும் எந்த அக்கறையும் கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications