விஜயகாந்த் என்னை அடிக்கவில்லை, மைக் பேட்டரியைத் தான் தட்டினார்: தர்மபுரி தேமுதிக வேட்பாளர்
தர்மபுரி: தனது கட்சியின் தலைவரான விஜயகாந்த் தன்னைத் தாக்கியதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி தொகுதியி்ல் தனது கட்சி வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
அப்போது வேனின் உள்ளே பாஸ்கர் உட்கார்ந்திருநதார். எனது கட்சி வேட்பாளர் பாண்டியனுக்கு வாக்களியுங்கள் என்று விஜய்காந்த் கூற, உடனே பாஸ்கர் எழுந்து தன் பெயர் பாண்டியன் அல்ல எனறு திருத்தினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் பாஸ்கரை சரமாரியாக அடித்தார்.
இது குறித்து தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் கூறியதாவது, தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அவர் வைத்திருந்த மைக்கின் பேட்டரி கழன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுக்குமாறு தனது உதவியாளரை கேட்டார். அவரும் எடுத்துக் கொடுத்தார். பின்னர் மீண்டும் கீழே விழுந்தபோதும் எடுத்துக் கொடுத்தார்.
பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் என்னை அடித்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் தான் அமர்ந்திருந்தோம்.
விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. நான் வெற்றி பெறக் கூடாது என்று இது போன்ற பொய்யான பிரசாரம் செய்கின்றனர் என்றார்.