சுயேட்சைகளுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கோரிக்கை
மதுரை: தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இதில் 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக போட்டியிடாத சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக எங்களது கட்சி போட்டியிடும் பாளையங்கோட்டை, மதுரை தெற்கு, திண்டுக்கல், பெரியகுளம் தொகுதிகளிலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் திருத்துறைப்பூண்டி தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படும். இது எங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும்.
எனவே, தாங்கள் தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கியிருப்பதை மாற்றி, அவர்களுக்கு வேறு சின்னம் ஒதுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதன்மூலம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலக் குழு அலுவலகச் செயலாளர் எஸ். ரமணி ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை நேரில் சந்தித்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன சோதனை- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு
வாகன சோதனை விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனையி்ல் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதி்முக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மதிமுகவினர் இந்த தேர்தலை பொதுமக்களோடு சேர்ந்து சந்திக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அவர்கள் விலகிவிட்டனர்.
மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற எண்ணம் வந்தபிறகு மதி்முக விலகல் தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.












Click it and Unblock the Notifications