8 காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா: தங்கபாலு அறிவிப்பு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக நிற்கும் டாக்டர் குமாரதாஸ், சிவகாமி உள்பட 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு இந்த தேர்தலில் சீட் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த சிலர் கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளனர்.
சென்னை மைலாப்பூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவியின் வேட்புமனு ஏற்கப்படாததையடுத்து மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார். இதற்கு கட்சியினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. அவரை எதிர்த்து மைலாப்பூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகாமி போட்டியிடுகிறார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்தது நிற்கும் வேட்பாளர்களை தங்கபாலு கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகளை போட்டியில் இருந்து விலகிக் கொள்ள காங்கிரஸ் வலியுறுத்தியது. சிலர் அதையும் மீறி போட்டி வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் உள்ளனர்.
அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் வேலூர்-வாலாஜா அசேன், ஆம்பூர்-பாலூர் சம்பத், சோளிங்கர்-எம்.முனிரத்தினம், பேராவூரணி-ஞான சம்பந்தம், ஒரத்தநாடு-குணபரமேஸ்வரி, சிங்காநல்லூர்-வி.வி.வாசன், மைலாப்பூர்-சிவகாமி, கிள்ளியுர்-டாக்டர் குமாரதாஸ்.
இவர்கள் 8 பேரும் காங்கிரஸ் கட்சியில் அவர்கள் வகிக்கின்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications