ஜெயலலிதாவின் கோவை பொதுக் கூட்டம்-புறக்கணித்தார் விஜய்காந்த்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் புறக்கணித்துவிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜய்காந்த்.

இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதேபோல திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் பெயரைச் சொல்லியோ அவரது கட்சி பெயரைச் சொல்லியோ வாக்கு கேட்கவில்லை.

மேலும் ஜெயா டிவியில் விஜய்காந்தின் பிரச்சாரத்தையோ கேப்டன் டிவியில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையோ காட்டுவதும் இல்லை.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை 'ஹை-லைட்' செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம், 'ஆர்எஸ்எஸ் சார்பு அதிபுத்திசாலி' பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற ஒப்புக் கொண்டார்.

இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில்யில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய்காந்த் வரவில்லை. தேமுதிக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பங்கேற்றார்.

மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில் ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவும் வர தாமதமாகிவிட்டது. இதனால் அவர் வரும் முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. கூட்டம் தொடங்கிய பின்னரே ஜெயலலிதா வந்து சேர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் ராஜா எம்.பி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது. கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக கொடிகளை விட குறைவான அளவிலேயே மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்குமாறு அதிமுக நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கும் தேமுதிகவுக்கும் உரிய மரியாதையை ஜெயலலிதா தர மாட்டார் என்பதாலேயே விஜய்காந்த் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அன்று சோனியாவுக்கு ஜெ 'நோஸ்-கட்'; இன்று விஜய்காந்த்:

2001ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது காங்கிரஸ். அப்போது விழுப்புரத்தில் ஜெயலலிதாவும் சோனியாவும் கூட்டாக பேச பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியா விழுப்புரம் வந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க, ஜெயலலிதா வரவேயில்லை. சோனியாவை கேவலப்படுத்தினார். இந் நிலையில் இன்று நீண்ட கோரிக்கைகளுக்குப் பின் விஜய்காந்துடன் கூட்டத்தில் பேச ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், விஜய்காந்த் திடீரென வராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+