அவதூறுப் பேச்சு: ஜெ., விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசார மேடை தவறாது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி பேசி வருகின்றனர்.

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜெயலலிதா கூட்டந்தோறும் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திமுக தேர்தல் குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. திமுக புகாரின்பேரில் அவதூறு பேச்சுகள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் விஜயகாந்த் மதுரை அருகே மேலூரில் பிரசாரம் செய்த போது முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசியதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாகதான் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

நேற்று இரவு சிதம்பரம் வந்த விஜயகாந்த், அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினார். அப்போது புவனகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கல்யாணம், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கோரிய நோட்டீஸை விஜயகாந்திடம் அளிக்க வந்தார்.

அதை தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ பெற்றுக் கொண்டார். இன்று மாலைக்குள் பதிலளிக்குமாறு விஜயகாந்த்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்பாளரை அடித்த விஜயகாந்த்-எஸ்.பிக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது. இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது கட்சி வேட்பாளர் பெயரை தவறாக கூறி விட்டார். இதை வேட்பாளர் சுட்டிக் காட்டியபோது கோபத்தில் அவரை அடித்து விட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதை திமுக தரப்பு ஒரு பிரச்சார டாப்பிக்காக மாற்றி ஊர் முழுக்க பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மணிமேகலை கண்ணன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது புகாருடன் வேட்பாளரை விஜயகாந்த் அடித்தது தொடர்பான பத்திரிக்கைச் செய்திகளையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இதை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலபதி மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் ஏ.ஆர்.செல்வகுமார், கே.மாரியப்பன், எஸ்.பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர்.

அதன் பின்னர், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+