ராகுல்காந்தி கூட்டத்தில் மர்ம மனிதர் ஊடுருவலா?-விளாத்திகுளத்தில் பரபரப்பு
தூத்துக்குடி: இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வெளியேறிய மர்ம மனிதர் விளாத்திகுளத்தில் இன்று ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் ஊடுருவினாரா என போலீசார் போட்டோவுடன் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல்காந்தி இன்று காலை 11 மணிக்கு அக்கட்சி வேட்பாளர் பெருமாள்சாமியை ஆதரித்து பேசுவதற்காக விளாத்திகுளம் காட்டுப்பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி காலை 8 மணி முதல் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பொது கூட்டத்திற்கு வந்தவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஒவ்வொரு தடுப்புப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே பொதுமக்களை கூட்டத்திற்கு அனுமதித்தனர்.
இதற்கிடையே ரகசிய உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புகைப்படத்துடன் கூடிய துண்டு சீட்டை கையில் வைத்து கொண்டு விசாரணை நடத்தினர்.
கூட்டத்தில் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கின்றனரா என்பதை கண்காணிக்கவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. நாகையன்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் செல்வகுமார் என்பவர் வெளியேறியுள்ளார்.
நீண்ட நாட்கள் முகாமிற்கு வராமல் தலைமறைவாக உள்ள அவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளராக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது புகைப்படத்தை கையில் வைத்து விசாரணை நடத்தினர். ராகுல் வருவதற்கு சற்று முன்னதாக போலீசார் மேற்கொண்ட இந்த விசாரணையால் விளாத்திகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications