தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்
ஈரோடு & தூத்துக்குடி: ஈரோடு: தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி சூசகமாகத் தெரிவித்தார்.
ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்தான் இந்தியாவின் பலம். மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசு அந்த மக்களைக் கண்டு கொள்ளவே இல்லை, பணக்காரர்களைப் பற்றித் தான் கவலைப்பட்டார்கள்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் மத்திய அரசு ரூ.70,000 கோடி கடனை தள்ளுபடி செய்தோம்.
100 நாள் வேலைத் திட்டம் மூலமாக ஏழை மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்க இருக்கும் அரசு, ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும், இளைஞர்களுக்காக உழைக்கும் அரசாக இருக்கும். தமிழக மக்கள் இந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
இதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை ராகுல் காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று முதல் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று காலை 11.00 மணிக்கு அவர் காரைக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விளாத்திகுளம் வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி காரில் செல்லும் அவர் குண்டு துளைக்காத மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள்சாமியை ஆதரித்து பேசுகிறார்.
இதற்காக ஹெலிபேடில் இருந்து மேடை வரையிலான பகுதி முழுவதும் போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ராகுலின் சிறப்பு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர எஸ்.பி. செந்தில்வேல் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு ராகுல் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சிறிய விமானத்தில் புதுச்சேரி செல்கிறார். இதனால் தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வி்மான நிலையம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் கியூ பிரிவு போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர், மரைன் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications