வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிய தேர்தல் அதிகாரிகள்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று திருப்பி வாங்கினர்.
மதுரை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொட்டாம்பட்டி அருகே அதிகாலை 3 மணி அளவில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 500-க்கு சில்லறை மாற்றியவர் சிக்கினார். இது தொடர்பாக அதே ஊரைச் சேரந்த ராமசாமி என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 30 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியை அடுத்துள்ள நைத்தான்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாண்டி என்பவரது மனைவி செல்லமுத்து (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பணம் கொடுதத வீடுகளுக்குச் சென்ற பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை திருப்பி வாங்கினர்.
விரட்டியதால் ரூ. 2 லட்சம் தெருவில் வீச்சு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதாக கடலூரில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலையில் புகார் வந்தது.
உடனே பறக்கும் படையினர் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள முள்ளிகிராம் பட்டு மற்றும் சோழவல்லி பகுதியில் அதிரடிச் சோதனை நடத்தினர். பின்னர் நெல்லிக்குப்பம் மெயின்ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் பறக்கும் படையினரைப் பார்த்ததும் வந்த வழியே திரும்பி முள்ளிகிராம்பட்டு ரோடு வழியாக வேகமாகச் சென்றது.
இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர் சினிமா பாணியில் அந்த காரைத் துரத்தினர். நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதி என்ற இடத்தில் சென்றபோது தப்பித்தால் போதும் என்று நினைத்து காரில் இருந்தவர்கள் ஒரு பண மூட்டையையும், வாக்காளர் பட்டியலையும் தெருவில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பண மூட்டையும், வாக்காளர் பட்டியலையும் கைப்பற்றிய பறக்கும் படையினர் அவற்றை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து எண்ணிப் பார்த்தபோது தான் மூட்டையில் ரூ. 2 லட்சத்து 76 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கார் நெய்வேலி வட்டம் 4 விவேகானந்தன் சாலையைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவருடையது என்று தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் வீட்டில் சிக்கிய ரூ.2 லட்சம்
ஆரணி அரசு வழக்கறிஞரும், திமுக பிரமுகருமான கே.ஆர்.ராஜன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறதாக சென்னை தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் பாதர்சுபேதார் தெருவில் இருக்கும் கே.ஆர்.ராஜன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜனின் அலுவலக அறையில் இருந்து ரூ.2 லட்சத்து 516 பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, வழக்கு தொடர்பாக வாடிக்கையாளர் கொடுத்த வைத்த பணத்தையும், மகளின் மேல்படிப்பிற்காகவும் பணம் வைத்திருப்பதாக கூறினார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications