லோக்பால் மசோதா கூட்டுக் குழு அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் உள்ளிட்ட அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க சகல அதிகாரங்களும் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்கும் மசோதாவில் திருத்தம் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவுக்கு மத்திய அமைச்சர் தலைமை வகிக்கக் கூடாது என்றும், அதில் பாதி உறுப்பினர்கள் மக்கள் சார்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டார் சமூக சேவகர் அன்னா ஹஸாரே.
நேற்று அவரது உண்ணாவிரதம் 4 வது நாளை எட்டிய நிலையில், சோனியா காந்தியின் பெரும் முயற்சியால், ஹஸாரேவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதுகுறித்த அரசாணையை எழுத்துப் பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாக ஹஸாரே நேற்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நகர் ஹஸாரேவின் பிரதிநிதிகள் கையில் அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், ஹஸாரே உண்ணாவிரதமிருந்த ஜந்தர் மந்தர் பகுதியே கோலாகலமாகியது. மக்கள் வெற்றிக் களிப்பில் உற்சாகக் குரல் எழுப்பினர். வெடிகள் கொளுத்தப்பட்டன.
இந்தியாவுக்கு நிஜமான வெற்றி கிடைத்ததாக மக்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த அறிவிப்பை வெளியிட்ட பின் பேசிய அன்னா ஹஸாரே, "இந்தியாவுக்கு நிஜமான வெற்றி கிடைத்துள்ளது", என்றார். பின்னர் அரசு வெளியிட்ட அறிவிக்கையின் பிரதியை கூடியிருந்தவர்களுக்கு எடுத்துக் காட்டினார். மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து தன்னுடன் உண்ணாவிரதமிருந்தமிருந்த அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஹஸாரே.












Click it and Unblock the Notifications