மு.க.அழகிரி, திமுகவினர் கார்களில் போலீஸார் திடீர் சோதனை
சாயல்குடி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக வேட்பாளர் உள்ளிட்டோரின் கார்களை வழிமறித்து போலீஸார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மு.க. அழகிரி வந்து, அப்பகுதியின் முக்கியப் பிரமுகரான இளைய ஜமீன்தார் வி.எஸ்.ஏ. சிவஞான பாண்டியனைச் சந்தித்தார்.
அப்போது, முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வ. சத்தியமூர்த்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிப்பது குறித்து அவருடன் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்ததும் வேட்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினரும் விரைந்து வந்தனர்.
இந்த நிலையில் அங்கு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அழகிரி உள்ளிட்டோர் காரில் கிளம்பி விட்டனர். ஆனால் போலீஸார் கார்களை வழிமறித்து நிறுத்தினர். அழகிரி உள்ளிட்டோரின கார்களை சோதனையிட்டனர்.
வேட்பாளர் சத்தியமூர்த்தியின் காரை சோதனையிட்டபோது அதில் ரூ. 75,000 பணம் இருந்தது. அதை என்ன செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகளிடம் போலீஸார் கேட்டபோது, குறைந்த அளவிலான பணம் என்பதால் கைப்பற்ற வேண்டாம் என உத்தரவு வந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்யாமல் கார்கள் தொடர்ந்து செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
அழகிரி உள்ளிட்டோரின் கார்களில் நடந்த இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications