அரசு ஊழியர்களுக்கு ஜெயலலிதா 'சமாதானக் கொடி'!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று கடந்த ஆட்சியில் அவர்களை வதைத்து எடுத்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சென்னை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பல இடங்களில் அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணமழை கொட்டுகிறது. கருணாநிதியின் ஊழல் பணத்தால் மக்களின் மனதை மாற்ற முடியாது. சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் வித்திட்டேன். உங்களின் தொகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து வைத்துள்ளேன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

முஸ்லிம்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரைக்கு தமிழக அரசு உதவி செய்கிறது. இதேபோல், கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள சாலிகிராமத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும் அரசு நிதி உதவி செய்யும்.

தமிழகத்தில் ஆளும் கட்சியினருக்கு அஞ்சாமல் தேர்தல் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் அதிகாரிகள் நிறைவேற்றி வருகின்றனர். இதன் காரணமாக திமுகவினர் தேர்தல் அதிகாரிகளைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

மதுரையில் தேர்தல் பார்வையாளரின் கார் ஓட்டுநராக இருந்தவர் கொல்லப்பட்டதன் காரணமாகவும், மேலூர் வட்டாட்சியர் தாக்கப்பட்டதன் காரணமாகவும் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

திமுகவினரின் இத்தகைய அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இருப்பினும், தேர்தல் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடுமையான மின்வெட்டு; எந்தப் பொருளையும் யாரும் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் விலைவாசி; ஊருக்கு ஊர் ரவுடி சாம்ராஜ்ஜியம்; மணல் கொள்ளை; அரிசி கடத்தல்; எதைத் தொட்டாலும் ஊழல்; சமூகத்தில் யாருமே சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்ற அக்கிரமம்; அடிதடி; கட்டப் பஞ்சாயத்து; கள்ளச் சாராயம்; கள்ள லாட்டரி என்று என்னென்ன சமூக தீமைகள் உண்டோ அவை அனைத்தும் தலைவிரித்து ஆடும் சூழ்நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இந்தத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது மீட்கப் போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மையெல்லாம் பார்த்துக் கேட்கிறது.

பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, மிகவும் பின்தங்கிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டின் கடன் என்பது தான் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் சாதனையாக இருக்கிறது.

வாக்காளப் பெருமக்களே, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நம் முன்னோர்கள் போராடியதைப் போல, இந்த தேர்தல் களத்தில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னும் இருக்கக் கூடிய கடமை என்பதை உங்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

ஏழு கோடி மக்கள் வளர்ச்சி பெற; தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட; தமிழர்கள் தலை நிமிர்ந்து நின்றிட; பண நாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேச நினைக்கும் கூட்டத்தை வீழ்த்திட; அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த மூன்று நாட்களாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பண மழை பெய்து கொண்டு இருக்கிறது. தி.மு.கவினரின் பணபலத்தைக் கண்டு நம்முடைய கழக தொண்டர்களும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும், வேட்பாளர்களும் மலைத்துப் போக வேண்டாம். இதனால் கலக்கமடைய வேண்டாம் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

என்னதான் பணத்தைக் கொட்டினாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது. தி.மு.கவை தோற்கடிக்க வேண்டும் என்பதிலும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆகவே, கழக தொண்டர்களும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும், வேட்பாளர்களும் சோர்வடையாமல், உற்சாகத்துடனும், எழிச்சியுடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றி, வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். நல் ஆசியுடனும், உங்கள் பேராதரவுடனும் கழக ஆட்சி அமைந்தவுடன், ரவுடியிசத்தை ஒழிக்கவும், நீங்கள் அனைவரும் சுதந்திரமாக வாழவும், நடவடிக்கை எடுக்கப்படும்.

கழக ஆட்சி அமைந்தவுடன், உங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முஸ்லிம்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரைக்கு தமிழக அரசு உதவி செய்கிறது. இதேபோல், கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள சாலிகிராமத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும் அரசு நிதி உதவி செய்யும் என்றார் ஜெயலலிதா.

பின்னர் காரில் இருந்தபடியே நிருபர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற வரவேற்பு மிக மிக அதிகம். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் ஒரு புது யுகத்தின் நுழைவுவாயிலில் உள்ளது.

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமாகத்தான் இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+