வன்முறை நடந்தால் மத்திய-மாநில உளவுப் பிரிவினரே பொறுப்பு: ஜெயலலிதா
சென்னை: வாக்குப் பதிவின்போது வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளே முழுப் பொறுப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, முதல்வர் கருணாநிதி தோல்வி பயத்தில் தவித்தார். இதனால், கடந்த சில நாள்களாக அவர் தேர்தல் ஆணையத்தை மிரட்டி வந்தார்.
இந்நிலையில், அதிமுகவுக்குச் சாதகமாக உள்ள தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கெல்லாம் தேர்தல் நாளன்று வன்முறையைத் தூண்டி விட திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
வாக்காளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில், திமுகவைச் சேர்ந்தவர்கள் வன்முறையைத் தூண்டிவிட தயாராக உள்ளதாகவும், வாக்காளர்கள் வராததை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து வாக்குகளையும் திமுகவுக்கு சாதகமாக பதிவு செய்ய ரெளடிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. எனவே, திமுகவினரின் வன்முறைச் செயல்களுக்கு துளியும் இடமளிக்காமல், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில், தேர்தல் ஆணையம் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். திமுகவினரின் இதுபோன்ற சதிகளையும், சூழ்ச்சிகளையும், வன்முறைத் திட்டங்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாக்குப் பதிவின்போது ஏதேனும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளே முழுப் பொறுப்பு என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கரை திரும்பாத மீனவர்களை மீட்க வேண்டும்:
அவர் வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்தார். ஆனால், அதற்கு மறுநாளே தமிழக மீனவர் ஒருவர் மரணமடைந்து இருக்கிறார்.
இந்த மாதம் 2ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் ஊர் திரும்பவில்லை. இந்நிலையில், அவர்களில் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியையும், மாரிமுத்து, ஜான்பால் ஆகிய இரண்டு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்ற செய்தியையும் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன்.
இதில், இலங்கை கடற்படையினரின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, கரை திரும்பாத இரண்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித ஆபத்துமின்றி, அவர்களை பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்து போன மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications