தஞ்சையில் வாக்குச்சாவடி மாற்றம்: வாக்களி்ப்பை புறக்கணித்த 2 கிராமங்கள்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு வாக்குச் சாவடிகள் மாறியுள்ளதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வாக்களிக்கச் செல்லாமல் புறக்கணித்தனர்.
திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட பருத்திக்குடி மற்றும் வலையவட்டம் ஊராட்சி மன்றங்களில் வாக்குச் சாவடிகள் மாறியுள்ளன. இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் 6 கிமீ ஆகும்.
பருத்திக்குடி சாவடியில் ஓட்டு போட வேண்டியவர்கள் இம்முறை வலையவட்டத்திலும், வலையவட்டம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பவர்கள் பந்திக்குடியிலும் வாக்களிக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த இரண்டு கிராம மக்களும் வாக்களிக்கச் செல்லவில்லை.
தகவல் அறிந்த அதிகாரிகள் தாங்களே வாகனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி கிராமத்தினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் பேச்சுவார்த்தை முடியாததால் அங்கு வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை.
கிருஷ்ணகிரியில் 535 பேர் புறக்கணிப்பு
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதிக்குட்பட்ட மாசிநாயக்கன் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேரக்கப்பள்ளி கிராமத்தில் 535 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்து ஓட்டுப் போடவில்லை.
இதனால் இங்கு அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications