பிரணாப் தலைமையில் 16ல் லோக்பால் கூட்டுக்குழு கூடுகிறது
டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்தின் பலனாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் கூட்டுக்குழு முதன்முதலாக வரும் 16-ம் தேதி கூடுகிறது.
ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அன்னா ஹஸாரே. அவர் ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவில் சில திருத்தங்கள் செய்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு நாட்டு மக்கள் எல்லாம் அமோக ஆதரவளித்தனர். இதையடுத்து மத்திய அரசு அன்னாவின் கோரிக்கையை ஏற்றது.
லோக்பால் கூட்டுக்குழுவில் பொதுமக்களும் இருக்க வேண்டும் என்று அன்னா வலியுறுத்தினார். இதையடுத்து அமைக்கப்பட்ட லோக்பால் கூட்டுக்குழுவில் அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோரும், பொதுமக்கள் சார்பில் அன்னா ஹஸாரே, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தகவல் அறியும் சமூக சேவகர் அர்விந்த் ஆகியோரும் உள்ளனர்.
லோக்பால் மசோதாவில் திருத்தத்தை வரையறை செய்ய 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுக்குழு முதன்முறையாக வரும் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி தலைமை வகிப்பார்.












Click it and Unblock the Notifications