கொளுத்தும் கோடை... சூடுபிடிக்கும் தர்பூசணி வியாபாரம்!!

சென்னையில் இப்போது கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. வெப்பத்தை தணிக்க மக்கள் குளிர்பானங்களையும், பழங்களையும் அதிகம் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர்.
வெயில் நேரத்தில் தர்ப்பூசணி, திராட்சை போன்ற பழங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடக்கிறது. இதில் நீர்ச்சத்தும் அதிகம்.
எல்லா சாலையிலும் தள்ளு வண்டிகடை முதல், பழச்சாறு கடைவரை தர்ப்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் தர்ப்பூசணியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனால் தர்ப்பூசணிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில் தர்ப்பூசணி பழங்கள் மலை போல் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. விலையும் எக்கச்சக்கம். ஒரு துண்டு விலை ரூ 10 இப்போது!
இன்றைய நிலையில், நாளொன்றுக்கு 3 லட்சம் கிலோ அளவுக்கு தர்ப்பூசணி பழம் விற்பனையாவதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் கோலார், பங்காருப்பேட்டை ஆந்திர மாநிலம் சித்தூர், தமிழ்நாட்டில் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், புதுச்சேரி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலிருந்து லாரிகளில் தர்ப்பூசணி வருகிறது.
ஒரு லோடு லாரி தர்ப்பூசணி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. சராசரியாக ஒரு தர்ப்பூசணி 3 முதல் 4 கிலோ எடை கொண்டதாக இருக்கும். கடைகளில் ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ 15க்கு விற்கப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.2 மட்டுமே தருகிறார்கள்!












Click it and Unblock the Notifications