மதுரையில் கல்லூரி மாணவி கொலை:தாய்-சகோதரி கவலைக்கிடம்
மதுரை: மதுரையில் நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியதில் பொறியியல் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். அவரது தாய், சகோதரி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கத்துக்கு (51) நாகஜோதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவில் வசித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்பே முத்துராமலிங்கம் லதா என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவருக்கு காயத்திரி (19), சித்திரை செல்வி (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வில்லாபுரம் மாரியப்ப பிள்ளை தெருவில் வசித்து வந்தனர்.
லதா குடும்பத்தினரை முத்துராமலிங்கம் கவனிக்கக் கூடாது என்று முத்துராமலிங்கத்தை நாகஜோதி தடுத்து வந்தார். இதையடுத்து லதா குடும்பத்தை முத்துராமலிங்கம் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இதனால் லதா-முத்துராமலிங்கம் இடையே பிரச்சனை வெடித்தது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு லதா தனது மகள்கள் காயத்திரி, சித்திரை செல்வி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியது.
லதா கதவைத் திறந்தவுடன் அந்தக் கும்பல் உள்ளே புகுந்து தாய் , மகள்களை சரமாரியாக வெட்டியது. இதில் சித்திரை செல்வி அதே இடத்தில் பலியானார். லதா மற்றும் காயத்திரி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சித்திரை செல்வி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். காயத்திரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வீடு புகுந்து வெட்டிய கொலையாளிகள் யார் என்பது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications