மோடியைப் புகழ்ந்ததை அன்னா ஹசாரே வாபஸ் பெறுவார்: சுவாமி அக்னிவேஷ்

லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த லோக்பால் மசோதாவை கொண்டு வரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே , ''குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரது திட்டங்களை பிற மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும்'' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக சேவகர் மேதா பட்கர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோர் ஹசாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேதா பட்கர் கூறுகையில், நரேந்திர மோடியை அன்னா ஹசாரே பாராட்டி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஊழலுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் மோடியை பாராட்டியது தேவையற்றது என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த ஹசாரே, நான் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை மக்களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்களையும் தான் பாராட்டினேனே தவிர மதவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனாலும் ஹசாரேவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் லோக் பால் மசோதாவுக்காக ஹசாரேவோடு சேர்ந்து போராடி வரும் சமூக நல ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், அகமதாபாத்தில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியதை அன்னா ஹசாரே வாபஸ் பெற முடியும்.
குஜராத் தொடர்பான விவரங்களா நாளை அண்ணா ஹசாரேவிடம் நாளை அளிக்க உள்ளேன். இதைத் தொடர்ந்து மோடியைப் புகழ்ந்து பேசியதை அண்ணா ஹசாரே வாபஸ் பெறுவார் என்று நம்புகிறேன் என்றார்.
லோக்பால் மசோதா குழுவை எதிர்த்து வழக்கு:
இந் நிலையில் லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் அண்ணா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக சேவகர்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எம்.எல். சர்மா உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியலமைப்பு ரீதியாக ஒரு நாடாளுமன்றக் குழுவைப் போல செயல்படும் லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் எம்.பிக்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதைத் தவிர வேறு யாரும் இடம்பெற முடியாது.
மேலும் தந்தையும் மகனான சாந்தி பூஷண், பிரஷாந்த் பூஷன் இருவரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளதும் தவறு என்று கூறப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததையடுத்து அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் 5 பேரும், சமூக சேவகர்கள் 5 பேரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசார் அவதூறு-சோனியாவுக்கு ஹசாரே கடிதம்:
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அன்னா ஹசாரே எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியினர் சிலர் லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மீது அவதூறு பிரசாரம் செய்து வருவதாகவும், இப்படிப்பட்ட அவதூறு அறிக்கைகளை காங்கிரஸ் கட்சியினர் வெளியிடுவதை, சோனியா தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
திக்விஜய் சிங்குக்கு எதிராக இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications