இறுதி கட்டப்போரில் 40,000 தமிழர்கள் படுகொலை: ஐ.நா. அறிக்கை
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் 40,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள் இராணுவத்தினருக்கும் இடையேயான தமிழ்ஈழ இறுதி கட்டப் போர் நடந்தது. அப்போது இலங்கை இராணுவம் ஏராளமான தமிழர்களை கொன்று குவித்தது. இந்த போர்க் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா.சபை ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் அறிக்கை சமர்பித்தது.
அந்த அறிக்கையின் சில பகுதிகள் லீக் ஆகியுள்ளன. அதில், இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில் இனப் படுகொலை நடந்ததுள்ளது. இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்துள்ளது. சுமார் 40,000 தமிழர்களை ராணுவம் கொன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதை இலங்கை அரசு மறுப்பதுடன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையை எதிர்த்து பேரணி-ஐ.நா. எச்சரிக்கை:
இந் நிலையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபக்சே பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐ.நா. சபை எதிர்ப்பும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், ஐ.நாவுக்கு எதிரான ராஜபக்சேவின் சவாலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. கொழும்பி பணியாற்றும் ஐ.நா. அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications