Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாயம் கேட்டு போராடிய வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் கடும் தடியடி நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் கல்வீசியதில் 9 போலீசாரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து கூறப்படுவதாவது:

வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் இளையராஜா (21). பாடியநல்லூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் இவர். ஆனால் அதிகமாக விடுமுறை எடுத்திருந்ததால் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனால் சில பேராசிரியர்களின் கால்களில் விழுந்து தனக்கும் ஹால் டிக்கெட் தரும்படி கேட்டுள்ளார் இளையராஜா. அதற்கு அவர்கள் மறுத்ததோடு, அவரது பெற்றோர் முன்னிலையிலேயே கடுமையாக திட்டி, ஹால் டிக்கெட்டும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். இதனால் மனமுடைந்த இளையராஜா கடந்த 11-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் போராட்டம்

இதை அறிந்த அந்த கல்லூரியின் மாணவ-மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

'தற்கொலை செய்து கொண்ட இளையராஜாவின் குடும்பத்துக்கு கல்லூரி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். அவரை தற்கொலைக்கு தூண்டிய 5 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என்பது உள்பட பல கோரிக்கைகள் மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்டன.

ஆனால், 'மிக அதிகமாக விடுமுறை எடுத்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்த மாணவர்கள் மட்டும் கல்லூரி நிர்ணயித்துள்ள அபராத தொகையினைக் கட்டி தேர்வு எழுதலாம்' என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு, பின்னர் கலைந்து சென்றனர்.

கைகளை அறுத்துக் கொண்டு...

இந்த நிலையில் கல்லூரியில் நேற்று (திங்கட்கிழமை) தேர்வுகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 'ஹால் டிக்கெட்' பெற்ற மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கு கல்லூரிக்குள் சென்று தேர்வு மையத்தில் அமர்ந்தனர்.

ஹால் டிக்கெட் வழங்கப்படாத மாணவ, மாணவிகள், கல்லூரி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டதும் கல்லூரிக்குள் தேர்வு எழுத அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளில் பலர், கல்லூரியை விட்டு வெளியேறி அவர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் இளையராஜாவின் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

கல்வீச்சு

சம்பவ இடத்திற்கு புளியந்தோப்பு போலீஸ் துணை ஆணையாளர் பாஸ்கர், உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீஸ் படை சென்றது. போராட்டம் நடத்திய மாணவர்களிடம், கல்லூரிக்குள் சென்று முதல்வரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு காணலாம் என்று அழைத்து சென்றனர்.

ஆனால் கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் திடீர் என்று போலீசார் மீது கல் வீசி தாக்கினர். கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். கல்லூரிக்குள் இருந்த மேஜை, நாற்காலி, கண்ணாடி போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.

10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறி, தங்களது கைகளையும், கழுத்தையும் பிளேடால் கீறிக்கொண்டனர். ரத்தம் வழிய வழிய போராட்டத்தைத் தொடர, பெரும் பதட்டம் நிலவியது.

மாணவர்களின் ரகளை தொடர்பாக கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவர்கள் மீது தடியடி

பின்னர் போலீசார் கல்லூரிக்குள் சென்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தடியடி நடத்தி கலைத்தனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 51 மாணவர்கள், 71 மாணவிகள், பெற்றோர் 7 பேர் ஆக மொத்தம் 129 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எம்.கே.பி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வழக்குப் பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

பின்னர் கைதான 129 பேரும் மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+