சொத்து விவரத்தை வெளியிட முடியாது: கே.ஜி.பாலகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: தனது சொத்து விவரத்தை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன்கள், சகோதரர் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கே.ஜி. பாலகிருஷ்ணனிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரள சிறப்பு பிரிவு போலீசார் பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக் கணக்கு குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நெருக்கடி காரணமாக இந்த மாத துவக்கத்தில் தனது சொத்து விவரங்களை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர் தற்போது முடியாது என்று கூறியுள்ளார்.
சொத்து விவரங்களை வெளியிடுவது எந்தவகையிலும் பொதுநலம் தொடர்பானது அல்ல அதனால் அதை வெளியிட முடியாது என்று வருமான வரித்துறைக்கு பாலகிருஷ்ணன் தகவல் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications