ஜெ கோரிக்கைப்படி வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அதிமுகவினர்!!
சென்னை: தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர் அதிமுக நிர்வாகிகள்.
தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துப் பேசினர்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே தேர்தல் ஆணையத்தின் உற்ற தோழர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதில் கவனமாக உள்ளது அதிமுக. தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. இந்த மையங்கள் முழுக்க துணை ராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்பட ஏக யோசனைகளைத் தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா. இப்போது அந்த யோசனைகளை முழுமையாக அமல்படுத்தி் வருகிறது தேர்தல் ஆணையம்.
இந் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், மைத்ரேயன் ஆகியோர் கோட்டையில் பிரவீண் குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டபடி துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரவீண் குமாருக்கு அவர்கள் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.
மத்திய தேர்தல் ஆணையத்தில் கமிஷ்னராக உள்ள சம்பத் ஐயங்கார், ஜெயலலிதாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா:
இந் நிலையில் வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு மேஜையையும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறுகையில்,
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். இதனை வேட்பாளர்களின் முகவர்கள் தெளிவாகப் பார்ப்பதற்கு வசதி செய்து தரப்படும். இதன்மூலம், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். பதிவான நடவடிக்கைகள் சி.டியில் பதிவு செய்து தரப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் 10 முதல் 15 மேஜைகளில் வைத்து எண்ணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications