ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு துணை போன மத்திய அரசைக் கண்டித்து பெரியார் திக ஆர்ப்பாட்டம்
கோவை: இலங்கை நடந்த இறுதி கட்டப் போரில் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க துணை போன மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஐக்கிய நாடுகள் குழு ஜெனிவாவில் கூடியது.
அப்போது இலங்கைப் போரி்ல் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அங்கு கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், எனவே இலங்கை அரசே ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஸ்விட்சர்லாந்து நாடு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்கு பாராட்டு தெரிவித்தும், அங்கு மனித உரிமைகள் மீறப்படவில்லை என்றும் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கையை பாராட்டி கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழு ஈழத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற இறுதி கட்டப் போரில் இலங்கை அரசு போர்க் குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான செயல்களையும் கொடூரமாக நடத்தி இருப்பது உண்மைதான் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் விசாரித்த தீர்ப்பாயமும், இதே கருத்தை வலியுறுத்தி இருந்தது.
ஈழப்போரில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழர்களும், ஈழத் தமிழர் ஆதரவாளர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இனியும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை தொடராமல் இலங்கை அரசின் குற்றங்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
போர்க் கொடுமைக்கு ஆளாகியிருக்கும் ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று (21-ம் தேதி) பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications