கடலூரில் ஆட்டோவில் இளம் பெண்கள் கடத்தல்: இருவர் கைது
கடலூர்: கடலூரில் கடைக்கு சென்று ஆட்டோவில் வீடு திரும்பிய இளம் பெண்கள் இருவரை ஆட்டோ ஓட்டுனரும் அவரது நண்பரும் சேர்ந்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகள் கலா (17). அவர் பிளஸ் டூ படித்து வந்தார்.
நேற்று மாலை கலாவும், அவரது அத்தை மகள் ராதிகாவும் பொருட்கள் வாங்க கடலூர் திருப்பாபுலியூருக்கு சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்த ஒரு ஆட்டோவில் தங்களது வீட்டிற்கு திரும்பினர்.
ஆனால் அந்த ஆட்டோ அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல், வேறு வழியில் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த கலா தனது செல்போன் மூலம் பெற்றோருக்கு உடனே தகவல் தெரிவிக்க முயன்றார்.
அப்போது ஆட்டோவில் வந்த வாலிபர் கலாவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மிரட்டினார். இதையடுத்து ஆட்டோ ஒரு வளைவில் திரும்பிய போது கலா ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார்.
பின்பு அங்கு நின்று கொண்டிருந்த தனது அண்ணனின் நண்பர்களிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனே திருப்பாபுலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர். இதை அறி்ந்த ஆட்டோவில் இருந்த இளைஞர்கள் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த ராதிகாவை போலீசார் மீட்டனர். பின்பு ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் இரண்டு பெண்களையும் கடத்தி சென்றது கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலமுரளி (25) மற்றும் அவரது நண்பர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications