சத்ய சாய் பாபா மரணம்... மக்கள் கண்ணீர்!
கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நோய்களாய் அவர் அவதிப்பட்டு வந்தார் பாபா. கடந்த மார்ச் 28-ம் தேதி அவர் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவரது உடல் உறுப்புகள் முற்றாக செயலிழந்த நிலையில் புட்டபர்த்தி சத்யசாய் ட்ரஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரது உறுப்புகள் எந்த மருந்தையும் ஏற்கவில்லை. எனவே அவரது உடல்நிலை மிக மோசமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகு, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...
'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.
சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.
பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு லட்சம் பக்தர்கள்
உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
சாய் பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.
ஆந்திராவில் 4 நாட்கள் துக்கம்... அரசு மரியாதையுடன் சாய்பாபா இறுதிச் சடங்கு!!
சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது.
பாபாவின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் வரும் புதன்கிழமை பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் சமாதியில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திர ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர்.
பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்றும், அவரது உடல் சமாதிக்குள் வைக்கப்படும் புதன் கிழமையும் அனந்தப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை என்றும் ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், "சத்ய சாய்பாபாவின் ஆன்மீக, சமூக சேவைகள் அளப்பரியவை. தெலுங்கானா மற்றும் ராயலசீமா மக்களின் தாகம் தீர்த்த மாமனிதர் அவர். இந்தியா முழுவதும் அவரது பணிகள் பரந்து விரிந்துள்ளன. கல்வித் துறையில் அவரது சேவைக்கு நிகரில்லை," என்றார்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்