தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் வந்தது. இருப்பினும் இது புரளி என்று பின்னர் தெரிய வந்தது.
சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்துக்கும், வடபழனியில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கும் நேற்று இரவு திடீரென்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த அலுவலகங்களில் திடீரென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையும் நடத்தினார்கள்.
இதனால் நேற்று இரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதனால் இந்த திடீர் சோதனையும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்று காவல்துறையிடம் பத்திரிக்கையாளர்கள் விசாரித்தனர். அப்போது, உயர் அதிகாரிகள் கூறியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் கூறுகையில்,
டெல்லியில் உள்ள மத்திய தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு, மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததாக தகவல் வந்துள்ளது. அந்த கடிதத்தில் வருகிற 29-ந் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம், என்றும் தகவல் உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு போடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதையொட்டி கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அலுவலக வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புகாக நிறுத்தப்பட்டுள்ளனர். கோட்டையிலும் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு வடபழனியில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்குகையில், நான் இப்போது தான், டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளேன். மிரட்டல் கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இனிமேல்தான் அதுபற்றி விசாரிக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications