புனே-இன்போசிஸ் பெண் ஊழியர் மீது பிளேடு தாக்குதல்
புனே: புனேவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் பிளேடால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்குள்ளான பெண்ணின் பெயர் நிஹரிகா பிரசாத். 24 வயதான இவர் இன்போசிஸ் அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். சதாசிவ பேத் பகுதியில் உள்ள சுசிலா ஹாஸ்டலில் தங்கியுள்ளார். அவரை அமித் குமார் சர்மா என்ற 24 வயது என்ஜீனியர் காதலித்துள்ளார். ஆனால் இதை நிஹரிகா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அமித்குமார் திடீரென வேலையை இழந்துள்ளார். இதனால் பெரும் விரக்தி அடைந்தார். காதலும் தோல்வி அடைந்து, வேலையும் போனதால் கடும் ஆத்திரமடைந்த அவர் பிளேடு மூலம் நிஹரிகாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்தார் நிஹரிகா.
அதன் பின்னர் தனது மணிக்கட்டை பிளேடால் அறுத்துத் தற்கொலைக்கும் முயன்றார் அமித்குமார்.
இதையடுத்து இருவரையும் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், நிஹரிகாவும், அமித்குமாரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால் அமித்குமாருடன் காதல் உறவை வைத்துக் கொள்ள நிஹரிகாவகு்கு விருப்பமில்லை. இதனால் வருத்தமடைந்த அமித்குமார் இந்த செயலை செய்துள்ளார் என்றனர். இருவருமே பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.