புதுவை ஆளுநரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கிடம், டெல்லி-மும்பையைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளனர்.
கள்ளப் பணம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க அப்போது எம்.பியாக இருந்தவரான இக்பால் சிங் சிபாரிசு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் அலுவலக அனுமதியைத் தொடர்ந்து இக்பால் சிங்கிடம் 3 முறை விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு. இந்த நிலையில் நேற்று மும்பையிலிருந்து 6 பேர் கொண்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குழு புதுவை ஆளுநர் மாளிகை வந்தனர்.
அங்கு சுமார் 5 மணி நேரம் இருந்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் வெளியேறினர். அவர்கள் கவர்னரிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றதாக தகவல் பரவியது. ஆனால் அமலாக்க பிரிவு இணை இயக்குனர் தலைமையில் வந்த அந்தக் குழுவினர் கவர்னர் மாளிகையில் வீடியோ கான்பரன்சிங் வசதியை ஏற்படுத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இன்று முதல் கவர்னரிடம் வீடியோகான்பரன்சிங் மூலம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அமலாக்க உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணை பல வாரங்கள் நீடிக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியது மற்றும் குருத்வாராவுக்கு நிலம் ஒதுக்கியது ஆகிய புகார்களும் கவர்னருக்கு எதிராக எழுந்துள்ளன. அது குறித்தும் தனியாக விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் கருப்புப் பண முதலையுடன் தொடர்புடைய இக்பால் சிங் பதவி விலகக் கோரி அதிமுக கூட்டணி சார்பில் புதுவையில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.