சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 2 பேர் பலி, 6 பேர் உயிர் ஊசல்
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியை அடுத்த நதிக்குடியைச் சேர்ந்த கனகவேல் என்பவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. 100 அறைகள் உள்ள இந்த ஆலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசுகள் உராய்ந்ததில் தீப்பொறிகள் பறந்தன. இது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து அங்குள்ள பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்த 6 அறைகளுக்கும் தீப்பரவியது. இந்த விபத்தில் திருவேடபுரத்தைச் சேர்ந்த இருளாண்டி (37), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்(25), மற்றொரு சுரேஷ்(28), விஜயகுமார்(33), சிவனாண்டிபட்டியைச் சேர்ந்த சிவபெருமான்(28), திருவேடபுரத்தைச் சேர்ந்த பொன் இருளாண்டி(46), இன்னொரு சுரேஷ்(26) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.