கள்ளக்காதலால் 7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை
நெல்லை: நெல்லை அருகே 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது.
நெலலை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்தில் உள்ள கிணற்றில் 7 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஞானப்பிரகாசி மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பாளை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்தது. கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி. அவரது மனைவி பத்மா. அவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணியன் பாளை குலவணிகர்புரத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். கட்டிட வேலைகளுக்கும் ஆள் சப்ளை செய்து வந்தார்.
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தச்சநல்லூரில் லட்சுமி என்ற பெண்ணுக்கு ஒப்பந்த முறையில் வீடு கட்டினார். இதற்கு சுப்பிரமணியன் கூலி ஆட்களை அனுப்பி உள்ளார். அவரும் அவ்வப்போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்தது. இந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகை தாசன் உதவியுடன் லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.
ஆனால் தற்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்குகும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் லட்சுமியின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த கள்ளக்காதல் சாமியார் மூகாம்பிகைதாசனுக்கும் தெரிய வந்தது. அவரும் லட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கள்ளத் தொடர்பு நீடித்தால் வீடு கட்ட பணம் தரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் உறவினர்கள் சுப்பிரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியாமல் லட்சுமியை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் தான் சுப்பிரமணியனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இது சாமியார் மூகாம்பிகை தாசனின் துண்டுதலினாலோ அல்லது லட்சுமியின் உறவினர்களாலோ நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகைதாசனிடமும் விசாரணை நடத்தவும் அவரை அழைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications