நீதிபதி தினகரன் மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: நில அபகரிப்பு செய்ததாக தன் மீது நடந்துவரும் விசாரணைக்கு தடைகோரி, சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினகரன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.
கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தினகரன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவிருந்த நிலையில், அவர் மீது தமிழகத்தில் நில அபகரிப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை அபகரித்தாகவும், வருமானத்தை மீறி சொத்து குவித்ததாகவும் 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் வழக்கறிஞர்கள் தினகரனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக இதையடுத்து, சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடம் மாற்றப்பட்டார்.
மேலும் நீதிபதி தினகரனை பதவி நீக்க வேண்டும் என்றும் ஏராளமான எம்.பிக்கள் ராஜ்யசபாவில் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து தினகரன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அவரை பதவி விலக்குவது குறித்து ஆராய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆப்தாப் ஆலம் தலைமையில் விசாரணை குழுவை, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி நியமித்தார். இந்தக் குழுவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை வரும் ஜூன் 23ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இதையடுத்து கடந்த 25ம் தேதி இந்தக் குழு விசாரணையைத் துவங்கியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலான இக்குழுவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேஹர், மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவும் இடம்பெற்றுள்ளனர்.
விசாரணைக் குழுவில் பி.பி.ராவ் இடம்பெற்றுள்ளதற்கு நீதிபதி தினகரன் ஆட்சேபம் தெரிவித்தார். அவரை விசாரணைக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று விசாரணைக் குழுவிடமே மனு அளித்தார். ஆனால், தினகரனின் கோரிக்கையை குழு ஏற்க மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் வழக்குத் தொடர்ந்தார் தினகரன். தனது மனுவி்ல், பி.பி.ராவ் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்டவர் என் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளது நியாயமற்றது. இயற்கை நியதிக்கு மாறானது. விசாரணையின் போதும் அவர் எனக்கு எதிராக பாரபட்சமாகச் செயல்பட வாய்ப்புள்ளது. எனவே விசாரணைக் குழுவில் இருந்து அவரை நீக்க மறுத்த குழுவின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தினகரன் மீதான விசாரணைக்கு இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications