தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் வெட்டி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளராக இருந்தவர் ஏ.சி. அருணா (50). இவர் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார், கான்டிராக்ட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தில் இன்று காலை 6.30 மணியளவில் வாக்கிங் சென்றார். அவருடன் முருகன் என்பவரும் சென்றார். சி.எஸ்.ஐ. மருத்துவமனை முன் சென்றபோது அவர்களை ஒரு கார் வழிமறித்தது.
அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், அருணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிவிட்டது. அருணாவுடன் வந்த முருகன் தப்பி ஓடியதால் அவரை கும்பல் விட்டுவிட்டது.
படுகாயமடைந்த அருணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக மாவட்ட துணைச் செயலாளர் அதிகாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடி நகரில் பதற்றம் நிலவுகிறது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக அருணாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கட்சிப் பணி மற்றும் கான்டிராக்ட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அருணாவை முன் விரோதத்தாலோ, தொழில் போட்டி காரணமாகவோ கூலிப்படை மூலம் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அருணாவின் குடும்பத்தினரிடமும், தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடமும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அருணாவுக்கு ராஜம் என்ற மனைவியும், லட்சுமிகாந்த் என்ற மகனும், செல்விபிரியா, சாந்தினி என்ற மகள்களும் உள்ளனர். மகன் லட்சுமிகாந்த் பி.இ. படித்து வருகிறார். மகள்கள் இருவரும் எம்.பில். படித்து வருகின்றனர்.