உழைத்து வாழ வேண்டும்! - விஜயகாந்த் மே தின வாழ்த்து!
சென்னை: மே தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
உழைப்பவருக்கு உயர்வு தேடுகின்ற நாள் மே நாளாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.
நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. எவ்வாறு பறவைகள் பறந்து இரை தேடுகின்றனவோ, மீன்கள் நீந்தி இரை தேடுகின்றனவோ, ஊர்வன ஊர்ந்து உணவு தேடுகின்றனவோ அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும், ஒருவரை இன்னொருவர் சுரண்டியும், ஒருவர் பொருளை இன்னொருவர் திருடியும் வாழ்வதென மனிதர்களுக்கிடையே தீயப் பழக்கங்கள் கால வேகத்தில் உண்டாகி விட்டன.
எல்லோரும் உழைத்து வாழ்வதன் மூலமே இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட முடியும். உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து ஒரு சிலர் சுக வாழ்வு நடத்துவதும், மிகப் பலர் வறுமையில் வாடவுமான நிலை ஏற்படுகிறது. சமுதாயத்தின் அமைப்பை மாற்றி எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தே.மு.தி.கவின் லட்சியமாகும்.
வறுமையை ஒழித்து எல்லோருக்கும் வாழ்வு கிடைக்க வழி தேடுவதே நமது திட்டமாகும். சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.
இவ்வாறு விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications