சட்ட மாணவர்கள் மோதல் வழக்கில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்டிராங் கைது
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்ட சென்னை போலீஸார், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்டிராங்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு மாணவர்கள் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் சிலரை, மாணவர்களின் இன்னொரு குழுவினர் கொலை வெறியுடன் தாக்கியதை போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், கல்லூரிக்கு வெளியே நின்று சாவகாசமாக வேடிக்கை பார்த்த செயல் நாட்டையே அதிர வைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸாரின் செயல்பாடுகள் மிகவும் நிதான கதியில் இருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் நிலை குறித்து விளக்கம் கேட்டது.
அதற்குப் பதிலளித்த தமிழக அரசு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் வக்கீலுமான ஆம்ஸ்டிராங், வக்கீல் ரஜினிகாந்த் உள்ளிட்ட 11 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தது.
இந்த பதில் உச்சநீதிமன்றத்தை கோபத்தில் ஆழ்த்தியது. ஆம்ஸ்டிராங் சென்னையில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். கொளத்தூர் தொகுதி சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டுள்ளார், பிரசாரமும் செய்துள்ளார். செய்தியாளர்களையும் பலமுறை சந்தித்துள்ளார். இப்படிப்பட்டவரை எப்படி தலைமறைவாக இருக்கிறார் என்று கூறலாம் என்று கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து ஆம்ஸ்டிராங் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆம்ஸ்டிராங்கும், வக்கீல் ரஜினிகாந்த்தும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி சுதந்திரம், ஆம்ஸ்டிராங் மனு மீது சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து ஆம்ஸ்டிராங் தனது மனுவைத் திரும்பப் பெற்றார். அதேசமயம், ரஜினிகாந்த்துக்கு ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பிற்பகலில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்டிராங்கை போலீஸார் கைது செய்தனர். அதற்கு முன்பாக ஹோட்டலைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அவரைக் கைது செய்த தகவல் பரவியதும் அங்கு ஆம்ஸ்டிராங் ஆதரவு வக்கீல்கள் சூழ்ந்தனர். போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஆம்ஸ்டிராங் போலீஸ் வேனில் ஏறிக் கொண்டார். போலீஸார் அவரை இரவு ஜார்ஜ்டவுன் 16வது மாஜிஸ்திரேட் ரமேஷ் முன்பு அவரது வீட்டில் வைத்து ஆஜர்படுத்தினர்.
அதன் பின்னர் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆம்ஸ்டிராங்கை கோட்டை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸார் அங்கு காவலில் வைத்தனர்.
இன்று ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர். அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications