டோர்ஜியின் ஹெலிகாப்டரை தேடும் பணி இன்னும் தொடர்கிறது
இடாநகர்: இன்று அதிகாலையிலேயே 100-க்கும் மேற்பட்ட மீட்பு பணி வீரர்கள் அருணாச்சல பிரதேச மலைப் பகுதியில் முதல்வர் டோர்ஜி கந்துவுடன் காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தவாங் மாவட்டத்தில் உள்ள சேலா கணவாய் அருகில் இருக்கும் நகர்ஜி என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் போன்ற பொருளை இஸ்ரோ ராடார் படம் பிடித்துள்ளது. அதை வைத்து தேடுதல் பணி தீவிரமாக நடக்கிறது.
இஸ்ரோ ராடார் பிரகாசமான மெடல் துண்டுகளைக் காட்டியுள்ளது. அது ஹெலிகாப்டரின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மீட்பு பணி வீரர்கள் இன்று அதிகாலையிலேயே சேலா கணவாய்க்கு சென்றபோதிலும் அங்கு பலத்த மழை பெய்வதால் தேடுதல் பணியை முழுவீச்சாக மேற்கொள்ள முடியவில்லை. இன்று மாலை முதல் குழு செயற்கைகோள் காட்டிய இடத்தைச் சென்றடையும் என்றார்.
மீட்புக் குழு அங்கு செல்லும் வரை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா என்று உறுதியாகக் கூறமுடியாது என்று அருணாச்சல பிரதேச மின்வாரியத்துறை அமைச்சர் கார்பம் கம்லின் தெரிவித்தார்.
சேலா கணவாயில் ஏற்கனவே 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6.05 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் தவாங்கில் இருந்து புறப்பட்டு சேலா கணவாய் வழியாகப் பறந்து தேடும் என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் ரஞ்சீப் சாகூ தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டரில் என்ஜின் கோளாறு ஏற்பட்டிருந்தால் பாதுகாப்பாக தரையிறங்குவது கடினம்.
கடந்த மாதம் 19-ம் தேதி தவாங்கில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications