நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை

நாகர்கோவிலை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் லார்ட் ஜெகநாத் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. கல்லூரி நுழைவாயில் அருகே சிட்டி யூனியன் பாங்கின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கல்லூரி காவலாளிகளே ஏ.டி.எம். மையத்தையும் கண்காணித்து வந்தனர்.
நேற்றிரவு கல்லூரி காவல் பணியில் காவலாளிகள் சுடலைமுத்து, பால்பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு செய்தித் தாள்களை வாங்க மாணவர்கள் 2 பேர், காவலாளிகளின் அறைக்கு வந்தனர். அப்போது காவலாளி சுடலைமுத்து ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் கல்லைப் போட்டு முகம் சிதறடிக்கப்பட்டிருந்தது. அறை எங்கும் ரத்தம் சிதறிக் கிடந்தது. இன்னொரு காவலாளி பால்பாண்டி கல்லூரிக்கு அருகே பிணமாக கிடந்தார். அவரது தலையும் சிதைக்கப்பட்டிருந்தது.
ஏ.டி.எம். மையம் உடைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க வந்த கும்பலை காவலாளிகள் தடுத்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் பணம் தப்பிவிட்டது.
இது குறித்து எஸ்.பி. பவானீஸ்வரி கூறுகையில், இந்தக் கொலைகளில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளன. ஏ.டி.எம்மை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராவில் சிலரது உருவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.
கொலை சம்பவத்தை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications