2ஜி வழக்கில் யாருக்கும் தாட்சன்யம் காட்டக் கூடாது-சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக படு மெத்தனமாக செயல்படுவதாக வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சரி தயவு தாட்சன்யம் காட்டாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அப்போது தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வருமான வரித்துறையின் வேகம் படு மோசமாக உள்ளது. இன்னும் விரைவாக அவர்கள் செயல்பட வேண்டும். இது ஏதோ ஒரு சாதாரண வரி ஏய்ப்பு வழக்கு அல்ல. இதை சாதாரண வழக்காக கருதக் கூடாது. இன்னும் விரைவாக வருமானவரித்துறை செயல்பட வேண்டும். சாதாரண முறையில் கையாள இவை சாதாரண வழக்குகள் அல்ல.
இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பணத்தின் அளவு மனதை உறைய வைப்பதாக உள்ளது. இத்தனை ஜீரோக்களை நாம் யாருமே நமது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.
முழுமையான விசாரணை நிலவர அறிக்கையை மே 13ம் தேதிக்குள் வருமான வரித்துறை தாக்கல் செயதாக வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 2 பேரை நியமிக்க வேண்டும் என்று பொது நலன் மனுக்களுக்கான மையம் விடுத்துள்ள கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது.
இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர். அவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய அதிகாரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சமோ, தயவு தாட்சன்யமோ காட்டக் கூடாது என்றனர்.
அப்போது பேசிய சிபிஐ வழக்கறிஞர் இந்த வழக்கில் யாரும் விடுபட மாட்டார்கள் என்றார்.
பின்னர் வழக்கின் விசாரணை மே 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications