பிரதமர், வாஜ்பாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு வலைவீச்சு

நேற்று முன்தினம் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கொல்லப்போவதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அந்த மர்ம அழைப்பு ஒரு செல்போனில் இருந்து வந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த அழைப்பு காசியாபாத்தில் இருந்து வந்துள்ளது. அந்த சிம்கார்டு காசியாபாத்தில் உள்ள சஞ்சய் நகரைச் சேர்ந்த ராம் குமார் என்பவரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த முகவரிக்குச் சென்று பார்த்ததில் ராம் குமார் என்பவரே இல்லை அது போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்ட சிம் என்று தெரிய வந்தது. இருப்பினும் அந்த எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த ஆசாமியைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி வசந்த கன்ச் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அகற்றியதாகவும் பிளாக்பெர்ரி போன் மூலம் எஸ்எம்எஸ் ஒன்று பரவியது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
இந்த எஸ்எம்எஸ் ஏராளமானவர்களுக்கு சென்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவமே நடக்கவில்லை. ஆனால் நடந்தது போன்று போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இந்த போலி எஸ்எம்எஸ்-ஐ அனுப்பி பீதியைக் கிளப்பிவிட்டது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications