அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம்
சென்னை: அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்நது அக்கட்சியினர் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேபோல தேமுதிக தலைமையகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையை எட்டி விட்ட தகவலைப் பார்த்ததும் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்து விட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் குதூகலித்தனர்.
வழக்கம் போல அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு ஆட அந்த இடமே கோலாகலமாகி விட்டது.
கட்சித் தலைவர்கள் யாரும் இன்னும் அதிமுக தலைமையகத்திற்கு வரவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருப்பதால் அவ்வை சண்முகம் சாலையில் நிற்க இடமில்லாத நிலை.
இதேபோல கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திலும் விழாக் கோலமாக உள்ளது.
நூற்றுக்கணக்கில் குவி்ந்துள்ள தேமுதிகவினர் பட்டாசுகளை வெடித்து அந்த இடத்தையே பரபரப்பாக்கி விட்டனர். கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக டபுள் டிஜிட்டில் இந்தக் கட்சி சீட் வாங்குவதால் தேமுதிகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு ஜெ நன்றி:
அதே போல அதிமுக முன்னிலை என்பதை அறிந்தவுடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீடு முன்பு பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். பட்டாசு வெடித்து ஜெயலலிதாவை வாழ்த்தி உற்சாக கோஷமிட்ட அவர்கள் இனிப்புகளையும் வழங்கினர்.
இந் நிலையில் பகல் 12.50 மணி அளவில் ஜெயலலிதா தன் வீட்டு மாடிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார். இரட்டை விரல்களைக் காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொண்டர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொண்டர்கள் அனைவரையும் வீட்டுக்குள் வர அனுமதிக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட, நுழைவு வாயில் திறக்கப்பட்டது. தொண்டர்கள் வீட்டுக்குள் சென்று வாழ்த்துக் கோஷம் எழுப்பி, ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications