பல லட்சங்கள் சுருட்டிய போலி உளவுத்துறை அதிகாரி கோவையில் கைது
கோவை: கோவையில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து பல லட்சம் அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
டூபாக்கூர்
கோவை சித்தாபுதூரில் ஐயப்பன் கோவில் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தங்கினார். சுற்றியிருந்த நபர்களிடம் தன்னை மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் தனக்கு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும், கொஞ்சம் பணம் செலவழித்தால் மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளார். இவரை நம்பிய சிலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
போலீசில் புகார்
பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், இவரது நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் உடனே அந்த டூபாக்கூர் ஆசாமியை கைது செய்தனர்.
விசாரணையில், மேற்படி ஆசாமி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குலு பகுதியைச் சேர்ந்த ரகுநந்தனின் மகன் சரத்குமார்(25)என்பது தெரிய வந்தது. இவர் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர். அவரது அறையை சோதனை செய்ததில் போலீஸ் உடை, போலி ஆவணங்கள், போலீஸ் லத்தி போன்றவை சிக்கின. இவர் பல்வேறு இடங்களில் பல லட்சம் சுருட்டியுள்ளதும் தெரிய வந்தது.
களத்தில் இறங்கிய கமிஷனர்
இதன் பின், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்த ஆசாமி மீதான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிர விசாரணையில் மேலும் பல மோசடிகள் வெளிவரலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.












Click it and Unblock the Notifications