ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?
சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக நாளை ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். இதையடுத்து அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அமைச்சர்களாக யார் யார் பதவியேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 25 பேரைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 4 பேர் வரை பெண்களாக இருக்கலாம்.
ஓ.பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக்கப்படலாம். போக்குவரத்துத் துறை செங்கோட்டையன் அல்லது நத்தம் விஸ்வநாதனுக்குக் கொடுக்கப்படலாம். அறநிலையத்துறை பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், மீன்வளத்துறை ஜெயக்குமாருக்கும் வழங்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தூர்ப்பாண்டியன், சங்கரன்கோவில் கருப்பசாமி, மதுரை செல்லூர் ராஜூ, சென்னையில் வென்ற பா.வளர்மதி, கோகுல இந்திரா, துறைமுகத்தில் வென்ற பழ. கருப்பையா ஆகியோரும் அமைச்சராகக் கூடும்.
அதேபோல வில்லிவாக்கத்தில் அன்பழகனை வீழ்த்திய ஜேசிடி பிரபாகரன் அமைச்சராக்கப்படலாம். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை கிடைக்கும் என்று பேசப்படுகிறது.
சபாநாயகர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அமைச்சர் பதவிக்கு அடிபடும் பழ. கருப்பையாவின் பெயர் சபாநாயகர் பதவிக்கும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.