பாரம்பரியம் மிக்க வனவிலங்கு சரணாலயம்
காடுகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆனைமலை புலிகள் காப்பகம். சில நாட்கள் தங்கி காடுகளின் அழகை ரசிப்பதோடு மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் ஆனைமலை கடவுளே நமக்காக அருளிய அழகின் மலை.
நகரத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆனைமலை சரணாலயம் கோவை மாவட்டத்தில் உள்ளது. பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களை உள்ளடக்கியது ஆனைமலை புலிகள் காப்பகம்.
பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயம் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.
பாரம்பரிய சின்னம்
கடல்மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீட்டர் உயரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 958 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் 2000 வகையான மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. இதில் ஏராளமான மருத்துவகுணம் நிறைந்த மூலிகைச்செடிகளும் உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த சரணாலயம் யுனெஸ்காவின் பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
விதவிதமான விலங்குகள்
இந்த காப்பகத்தில் புலிகள், யானைகள், நீலகிரி தார், கரடி, நரி உள்ளிட்ட பல விலங்குகளும், பலவகையான அணில்களும், பாதுகாக்கப்படுகின்றன. இதுபோல 300க்கும் மேற்பட்ட பலவகையான பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த அழகிய வனப்பகுதியை சுற்றிப்பார்க்க வனத்துறை சார்பில் யானைசவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேன் மூலமாகவும் காடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம். வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகள் நிறைவு செய்கின்றன.
டாப்சிலிப் வனப்பகுதி
இந்த சரணாலயத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. அழகிய பசுமை மாறாக்காடுகளைக் கொண்ட இந்த வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு சிங்கவால் குரங்குகள் மற்றும் ஏரளாமான மான்வகைகள் உள்ளன. அவற்றை நேரடியாக எளிதில் கண்டு ரசிக்கலாம். சொந்த வாகனம் மூலம் டாப்சிலிப் செல்பவர்கள் அதனை வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்திவிட்டு வனத்துறையினர் ஏற்பாடு செய்து தரும் வாகனம் மூலமே காடுகளை சுற்றிப்பார்க்க முடியும்.
எப்படி செல்வது
கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.இங்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை சீசன் காலமாகும். மழைக் காலங்களில் இங்கு செல்வது ஆபத்தானது.
காடுகளின் அழகை சில நாட்கள் தங்கி ரசிக்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ப குடில்களும் உள்ளன. முன்பதிவு அவசியம் தேவை.