சாய ஆலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சண்முகவேலு உறுதி
திருப்பூர்: சாய ஆலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சண்முகவேலு உறுதியளித்துள்ளார்.
திருப்பூர் வந்த அமைச்சர்
சாய ஆலை பிரச்சனை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த தமிழக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு நேற்று திருப்பூர் வந்தார்.
அவரது தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில்துறையினர் கலந்து கொண்டனர். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்தன், பரமசிவன், நடராஜன், தங்கவேல் மற்றும் கருப்பசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில்துறை நிர்வாகிகள் பனியன் தொழில் சந்திக்கும் நெருக்கடிகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அவர்களது பிரச்சனைகள் அனைத்தையும் கேட்ட பிறகு அமைச்சர் கூறியதாவது,
பனியன் தொழில் என்பது ஒரு கூட்டுத்தொழில். படிப்படியாக நூல் விலை உயர்வு, மின் தடை, ஊழியர் பற்றாக்குறை, சாய ஆலை கழிவு நீர் போன்ற பிரச்சனைகளால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்குமே செயல்படுத்த முடியாத 'ஜீரோ டிஸ்சார்ஜ்" முறையை செய்வதாக நீதி மன்றத்தில் தொழில்துறையினர் உறுதியளித்தது தான் பெரிய தவறு. இந்தப் பிரச்சனையை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
கடலில் கலக்க ஏற்பாடு
திருப்பூர் பிரச்சனையை உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காணும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை ஒருங்கிணைத்து சாயக் கழிவை கடலில் கலக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இத்திட்டம் குறித்து தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிவாரண நிதி
சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிவாரண நிதி உடனே வழங்க ஏற்பாடு செய்யப்படும். தொழில் பாதுகாப்பு குழு அறிவித்துள்ள லட்சம் பேர் கலந்துகொள்ளும் பேரணியை வாபஸ் பெற வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகவேலு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications